சும்மா ஒரு இடக்கு மடக்கு கேள்வி!

இது ஒரு இடக்கு மடக்கு கேள்வி. "நல்ல கேள்வி எதுவும் கேக்க தெரியாதா? லொள்ளுக் கேள்வியா இருந்தா இங்க எதுக்கு போடணும்" அப்படின்னு சில குரல்கள் ஒலிக்கிறா மாதிரி இருக்கு. காரணம் இருக்கே, சும்மா போடுவனா என்ன? இந்த கேள்வியை என்கிட்டே ஒருத்தர் கேட்டப்போ நான் கொஞ்ச நேரம் குழம்பிப்போனேன். 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' அப்படின்னு நினைச்சு, என்னைப்போலவே ஒரு சிலராவது, அட்லீஸ்ட் ஒரு சில நிமிஷமாவது குழம்பிப் போக மாட்டாங்களான்னு ஒரு சின்ன நப்பாசையோடவும், நல்லெண்ணத்தோடவும் இதை இங்க புளொக்ல போடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.

இந்த கேள்வி பார்த்ததும் 'இதெல்லாம் ஒரு கேள்வியா' அப்படின்னு திட்டுறவங்க பதிலே சொல்லாமே போயிடுங்க (பப்ளிக்கா நான் திட்டு வாங்கிட கூடாதில்லையா, அதுதான்). அப்புறம், கொஞ்ச நேரமாவது குழம்பி போறவங்க, தயவு செய்து ஒரு பதில் போட்டுட்டு போயிடுங்க. (எனக்கும் கொஞ்சம் திருப்தி வேணுமில்லையா?). கொஞ்ச நேரம் குழம்பிப்போனாலும், அதை இங்க பப்ளிக்கில காட்டிக்க விருப்பமில்லாதவங்க, அட்லீஸ்ட் அந்த நட்சத்திரத்துலே ஒரு குத்து வைத்து, மத்தவங்களுக்கும் கொஞ்சம் பரிந்துரை செய்துட்டு போங்க (எனக்கு இருக்கிற அந்த நல்லெண்ணம் உங்களுக்கும் இருக்கும் ன்னு நம்பறேன், ஹி ஹி, இன்னும் ஒரு சிலரை சேத்து குழப்பலாமே?).

"எல்லாம் இருக்கட்டும், இந்த முன்னுரை எல்லாம் நமக்கெதுக்கு அந்தக் கேள்விதான் என்ன?" அப்படின்னு கூக்குரல் எல்லாம் வருதுபோல இருக்கு. கேள்வி கடைசியாத்தான் வரும். அதுக்கு முன்னாலே ஒரு சின்ன கதை வருது, இருங்க.

ஒரு ஊருல அப்பன், சுப்பன் ன்னு ரெண்டு தொழிலாளிங்க, ஒரு முதலாளிகிட்டே வேலை செஞ்சாங்களாம் (தொழிலாளிங்கன்னா முதலாளிகிட்டேதான் வேலை பாப்பாங்க, இல்லாமெ ஒரு தொழிலாளி கிட்டேவா வேலை பாப்பாங்க, அப்படின்னு கடுப்பாயிடாதீங்க). அந்த முதலாளிகிட்டே ஒரு ஆடு இருந்துதாம். அந்த ஆடு ஒரு நாள் ரெண்டு குட்டி போட்டுதாம். ஆனால் அந்த ஆடு குட்டி போட்டதும் செத்துப் போச்சாம். அட அம்மா ஆடு இல்லாமே இந்தக் குட்டிகளை எப்படி வளர்க்கிறதுன்னு நினைச்ச அந்த முதலாளி, அந்த ரெண்டு குட்டிகளையும் விக்கிறதுக்கு முடிவு செஞ்சாராம். அந்த தொழிலாளிங்க ரெண்டு பேர்கிட்டேயும், அதை விக்கிறதுக்கு ஏற்பாடு செய்ய சொன்னாராம். அவங்களும் சரின்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போனாங்க. போற வழியிலே அவங்க ரெண்டு பேரும் யோசிச்சாங்க 'அட இந்த ஆட்டுக் குட்டிங்கள நாமளே வாங்கி வளர்த்தா என்னா' அப்படின்னு. அவங்க ரெண்டு பேரும், ஆளுக்கு 25 ரூபா போட்டு அந்த ஆட்டுகுட்டிங்க ரெண்டையும், 50 ரூபாவுக்கு முதலாளி கிட்டே வாங்கலாம்னு முடிவு பண்ணினாங்க. (இந்த விலைவாசியிலே 50 ரூபாவுக்கு யாரு ஆட்டுக்குட்டி, அதுவும் ரெண்டு குட்டிங்க தருவா அப்படின்னுன்னு தர்க்கம் எல்லாம் பண்ணாதீங்க. சும்மா ஒரு கணக்குக்குத்தானே, கண்டுக்காதீங்க). ஆங்... நான் எங்கே விட்டேன், ஆஆ... அப்படியே மறுநாள் முதலாளிகிட்டே போய் 50 ரூபா கொடுத்துட்டு, ரெண்டு ஆட்டுக் குட்டியையும் வாங்கிகிட்டு போனாங்க. அவங்க போனப்புறம்தான் முதலாளி யோசிச்சார், 'அட, நம்மகிட்டே வேலை பாக்குற ஆளுங்களாச்சே, அதுனாலே கொஞ்சம் விலையை கொறைச்சுக்கலாமே' அப்படின்னு. யோசிச்சவர் ஒடனேயே, அங்கே வேலை பார்த்துக்கிட்டு இருந்த கந்தனைக் கூப்பிட்டு, 5 ரூபாவைக் கொடுத்து, "இதை அவங்ககிட்டே திருப்பிக் கொடுத்துட்டு வா" அப்படின்னு கொடுத்து அனுப்பினார். அந்தக் கந்தன் என்ன பண்னினான்னா, அதுல 2 ரூபாவை அவன் எடுத்துக்கிட்டு 3 ரூபாவை மட்டும் அந்த அப்பன் + சுப்பன்கிட்டே கொண்டுபோய்க் குடுத்தான். அவங்க ரெண்டு பேரும், அதை பாதியாக்கி 1.50 ரூபாவா எடுத்துக்கிட்டாங்க.

சரி இதுதான் கதை. இப்போ கேள்வி என்னன்னா, அப்பனுக்கும், சுப்பனுக்கும், அவங்க அவங்க குடுத்த காசிலே 1.50 ரூபா திருப்பி கிடைச்சாசு. அப்போ, அவங்க ஒவ்வொருத்தரும் அந்த ஆட்டுக் குட்டிக்கு கொடுத்திருக்கிற காசு 25-1.50=23.50 ரூபா. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொடுத்திருக்கிற காசு 23.50 + 23.50 = 47 ரூபா, சரியா? இதுல கந்தன் எடுத்துக்கிட்ட காசு 2 ரூபா, சரியா? அப்போ 47 + 2 = 49 ரூபா ஆச்சா? அப்படின்னா, அந்த மிச்சம் 1 ரூபா எங்க போச்சு? இதுதான் கேள்வி.

என்ன? கவுண்டமணி, செந்திலோட வாழைப்பழ க
ணக்கு மாதிரி இருக்கா? இல்லையே அப்படின்னு சொல்லுறீங்களா? அப்போ பதிலை சொல்லிட்டு போங்க பார்க்கலாம்.