எனது ஞாயிறு!!

போன ஞாயிற்றுக் கிழமை வேறு வேலை எதுவும் பெரிதாக இருக்கவில்லை என்று தோன்றியது. "இன்றைக்கு இந்த வலைப்பதிவுலே ஏதாவது எழுத வேணும்" என்று காலையிலேயே நினைத்துக் கொண்டேன். (வலைப்பதிவு இருக்கே என்பதற்காக எழுதுறதா? அல்லது இருப்பதை எழுதுறதுக்காக வலைப்பதிவா? ஒன்றுமே புரியலையே?).

காலை எழுந்து, இருந்த வேலைகளை முடித்து விட்டு, மகளை டான்ஸ் கிளாசுக்கு அப்பாவுடன் அனுப்பி விட்டு, கணினிக்கு போக முயன்றபோதுதான் பார்த்தேன், மகளுடைய புத்தக மேசை கொஞ்சம் அலங்கோலமாய் இருந்தது. சரி அதை அடுக்கி வைத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று நினைத்து, அந்த வேலையை ஆரம்பித்தேன். அதை அடுக்கிக் கொண்டு போனபோது பார்த்தால் அங்கே சூரியகாந்தி விதைகள் இருந்த ஒரு சின்னப் பை இருந்தது. அடடா, இதை இந்த சம்மருக்கு முளைக்க வைக்க வேண்டும் என நினைத்திருந்தேனே, இது எப்படி இங்கே வந்தது (வேறு எப்படி, வழக்கம்போல் மகளுடைய வேலைதான்), இன்னும் வேறு சில தாவர விதைகளும் வைத்திருந்தோமே என்று நினைத்துக் கொண்டே அவற்றை தேட ஆரம்பித்தேன். அதை தேடிக் கொண்டு போகும்போது கிச்சின் லே ஒரு ஒரு drawer க்குள்ளே இருந்தது. அதை எடுக்கலாம் என்று போனால், அதற்குள் தேவையே இல்லாத பல பொருட்கள். இதை எப்படி இத்தனை நாள் கவனிக்காமல் விட்டோம் என்று எண்ணிக் கொண்டே அதை கிளீன் பண்ண தொடங்கினேன். அதற்குள் book shelf இல் வைக்க வேண்டிய பொருட்களும் சேர்ந்து இருந்தது. சரி அவற்றை எடுத்துக் கொண்டு book shelf பக்கம் போனேனா, அங்கேயும் மீள அடுக்க வேண்டியவாறு நிலமை.

பிறகென்ன, book shelf அடுக்கி வைத்து விட்டு, மீண்டும் கிச்சனுக்கு வந்து drawer எல்லாம் கிளீன் பண்ணி அடுக்கி வைத்து, பிறகு மகளுடைய மேசைக்கு வந்து, அதெல்லாம் அடுக்கி முடித்து........ அப்பாடா, நேரமும் போய்விட்டது. இனி என்ன சமையலுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கத்தான் நேரமிருந்தது.

நான், என்னை ரொம்ப சிஸ்டமட்டிக் ஆன ஆள் என்று நினைத்திருந்தேனே. இவ்வளவுதானா? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

பி.கு. மகளின் மேசையைப் பார்க்கும்போது, நான் சிறு வயதில் வைத்திருந்த ஒரு மேசை நினைவுக்கு வருகிறது. அதுபற்றியும் எழுத வேணும்.