சும்மா ஒரு இடக்கு மடக்கு கேள்வி!

இது ஒரு இடக்கு மடக்கு கேள்வி. "நல்ல கேள்வி எதுவும் கேக்க தெரியாதா? லொள்ளுக் கேள்வியா இருந்தா இங்க எதுக்கு போடணும்" அப்படின்னு சில குரல்கள் ஒலிக்கிறா மாதிரி இருக்கு. காரணம் இருக்கே, சும்மா போடுவனா என்ன? இந்த கேள்வியை என்கிட்டே ஒருத்தர் கேட்டப்போ நான் கொஞ்ச நேரம் குழம்பிப்போனேன். 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' அப்படின்னு நினைச்சு, என்னைப்போலவே ஒரு சிலராவது, அட்லீஸ்ட் ஒரு சில நிமிஷமாவது குழம்பிப் போக மாட்டாங்களான்னு ஒரு சின்ன நப்பாசையோடவும், நல்லெண்ணத்தோடவும் இதை இங்க புளொக்ல போடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.

இந்த கேள்வி பார்த்ததும் 'இதெல்லாம் ஒரு கேள்வியா' அப்படின்னு திட்டுறவங்க பதிலே சொல்லாமே போயிடுங்க (பப்ளிக்கா நான் திட்டு வாங்கிட கூடாதில்லையா, அதுதான்). அப்புறம், கொஞ்ச நேரமாவது குழம்பி போறவங்க, தயவு செய்து ஒரு பதில் போட்டுட்டு போயிடுங்க. (எனக்கும் கொஞ்சம் திருப்தி வேணுமில்லையா?). கொஞ்ச நேரம் குழம்பிப்போனாலும், அதை இங்க பப்ளிக்கில காட்டிக்க விருப்பமில்லாதவங்க, அட்லீஸ்ட் அந்த நட்சத்திரத்துலே ஒரு குத்து வைத்து, மத்தவங்களுக்கும் கொஞ்சம் பரிந்துரை செய்துட்டு போங்க (எனக்கு இருக்கிற அந்த நல்லெண்ணம் உங்களுக்கும் இருக்கும் ன்னு நம்பறேன், ஹி ஹி, இன்னும் ஒரு சிலரை சேத்து குழப்பலாமே?).

"எல்லாம் இருக்கட்டும், இந்த முன்னுரை எல்லாம் நமக்கெதுக்கு அந்தக் கேள்விதான் என்ன?" அப்படின்னு கூக்குரல் எல்லாம் வருதுபோல இருக்கு. கேள்வி கடைசியாத்தான் வரும். அதுக்கு முன்னாலே ஒரு சின்ன கதை வருது, இருங்க.

ஒரு ஊருல அப்பன், சுப்பன் ன்னு ரெண்டு தொழிலாளிங்க, ஒரு முதலாளிகிட்டே வேலை செஞ்சாங்களாம் (தொழிலாளிங்கன்னா முதலாளிகிட்டேதான் வேலை பாப்பாங்க, இல்லாமெ ஒரு தொழிலாளி கிட்டேவா வேலை பாப்பாங்க, அப்படின்னு கடுப்பாயிடாதீங்க). அந்த முதலாளிகிட்டே ஒரு ஆடு இருந்துதாம். அந்த ஆடு ஒரு நாள் ரெண்டு குட்டி போட்டுதாம். ஆனால் அந்த ஆடு குட்டி போட்டதும் செத்துப் போச்சாம். அட அம்மா ஆடு இல்லாமே இந்தக் குட்டிகளை எப்படி வளர்க்கிறதுன்னு நினைச்ச அந்த முதலாளி, அந்த ரெண்டு குட்டிகளையும் விக்கிறதுக்கு முடிவு செஞ்சாராம். அந்த தொழிலாளிங்க ரெண்டு பேர்கிட்டேயும், அதை விக்கிறதுக்கு ஏற்பாடு செய்ய சொன்னாராம். அவங்களும் சரின்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போனாங்க. போற வழியிலே அவங்க ரெண்டு பேரும் யோசிச்சாங்க 'அட இந்த ஆட்டுக் குட்டிங்கள நாமளே வாங்கி வளர்த்தா என்னா' அப்படின்னு. அவங்க ரெண்டு பேரும், ஆளுக்கு 25 ரூபா போட்டு அந்த ஆட்டுகுட்டிங்க ரெண்டையும், 50 ரூபாவுக்கு முதலாளி கிட்டே வாங்கலாம்னு முடிவு பண்ணினாங்க. (இந்த விலைவாசியிலே 50 ரூபாவுக்கு யாரு ஆட்டுக்குட்டி, அதுவும் ரெண்டு குட்டிங்க தருவா அப்படின்னுன்னு தர்க்கம் எல்லாம் பண்ணாதீங்க. சும்மா ஒரு கணக்குக்குத்தானே, கண்டுக்காதீங்க). ஆங்... நான் எங்கே விட்டேன், ஆஆ... அப்படியே மறுநாள் முதலாளிகிட்டே போய் 50 ரூபா கொடுத்துட்டு, ரெண்டு ஆட்டுக் குட்டியையும் வாங்கிகிட்டு போனாங்க. அவங்க போனப்புறம்தான் முதலாளி யோசிச்சார், 'அட, நம்மகிட்டே வேலை பாக்குற ஆளுங்களாச்சே, அதுனாலே கொஞ்சம் விலையை கொறைச்சுக்கலாமே' அப்படின்னு. யோசிச்சவர் ஒடனேயே, அங்கே வேலை பார்த்துக்கிட்டு இருந்த கந்தனைக் கூப்பிட்டு, 5 ரூபாவைக் கொடுத்து, "இதை அவங்ககிட்டே திருப்பிக் கொடுத்துட்டு வா" அப்படின்னு கொடுத்து அனுப்பினார். அந்தக் கந்தன் என்ன பண்னினான்னா, அதுல 2 ரூபாவை அவன் எடுத்துக்கிட்டு 3 ரூபாவை மட்டும் அந்த அப்பன் + சுப்பன்கிட்டே கொண்டுபோய்க் குடுத்தான். அவங்க ரெண்டு பேரும், அதை பாதியாக்கி 1.50 ரூபாவா எடுத்துக்கிட்டாங்க.

சரி இதுதான் கதை. இப்போ கேள்வி என்னன்னா, அப்பனுக்கும், சுப்பனுக்கும், அவங்க அவங்க குடுத்த காசிலே 1.50 ரூபா திருப்பி கிடைச்சாசு. அப்போ, அவங்க ஒவ்வொருத்தரும் அந்த ஆட்டுக் குட்டிக்கு கொடுத்திருக்கிற காசு 25-1.50=23.50 ரூபா. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொடுத்திருக்கிற காசு 23.50 + 23.50 = 47 ரூபா, சரியா? இதுல கந்தன் எடுத்துக்கிட்ட காசு 2 ரூபா, சரியா? அப்போ 47 + 2 = 49 ரூபா ஆச்சா? அப்படின்னா, அந்த மிச்சம் 1 ரூபா எங்க போச்சு? இதுதான் கேள்வி.

என்ன? கவுண்டமணி, செந்திலோட வாழைப்பழ க
ணக்கு மாதிரி இருக்கா? இல்லையே அப்படின்னு சொல்லுறீங்களா? அப்போ பதிலை சொல்லிட்டு போங்க பார்க்கலாம்.

கண்ணீர்ப்பூக்கள்!!

போன வார விடுமுறையில் கண்ணாடிப்பூக்கள் படம் பார்த்தேன். அதை இப்பத்தான் பார்த்தீர்களா என்று பலரும் சலித்துக் கொள்வதுபோல் எனக்கு ஒரு தோற்றம். என்ன செய்வது நானிருக்கும் இடத்தில் தமிழ்ப்படங்கள் எடுப்பது இலகுவல்லவே. லண்டன் போயிருந்தபோது ஒரு படத்துக்கு 3 பவுண்ஸ் (மட்டுமே) கொடுத்து DVD கொஞ்சம் வாங்கி வந்தோம். அதுலே ஒன்றுதான் இந்தக் கண்ணாடிப்பூக்களும்.

நிறைய நாளைக்குப் பிறகு நல்ல ஒரு கருத்துள்ள படம் பார்த்த திருப்தி. இரண்டாவது குழந்தை பிறந்ததும், முதல் குழந்தை மேல் வைத்திருக்கும் கவனங்கள் குறைந்து விடுவதும், அதனால் அந்த குழந்தைகள் மனதில் எழும் பிரச்சனைகளையும் கதை எடுத்துக் காட்டுகிறது. இரண்டாவது குழந்தைக்கு தயாராகும் எல்லா அம்மா, அப்பாக்களும் கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயம்.

படத்தில் பல இடங்கள், மனதை ஆழமாகத் தொட்டது. ஒரு பக்கம் இறந்து போன குழந்தை, மறு பக்கம் அந்தக் குழந்தையின் இறப்புக்கு தமது மற்ற குழந்தையே காரணம் என்பதை அறிந்ததில் அதிர்ச்சி, அந்தக் குழந்தையை சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி பாதுகாப்பது என்பது புரியாத குழப்பம், தமது குழந்தை தப்பு செய்வதற்கு தாமே காரணமாகி விட்டோமே என்ற தவிப்பு.... இப்படியே அந்தப் பெற்றோர் படும் அவஸ்தைகள் யதார்த்தமாக சொல்லப்பட்டு இருந்தது.

அந்தக் குட்டிப்பையனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியதும், அங்கே அந்த வில்லனை பொறுப்பாளராகப் பார்த்ததுமே, நெஞ்சுக்குள் படபடப்பு. அந்த நபர் கொஞ்சம் இடக்கு மடக்காக ஆரம்பத்தில் இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு கடுமை அங்கே தொடர்ந்து வரவில்லை (நல்ல வேளையாக).

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்... உண்மையிலேயே இந்தியாவில் இருக்கும் சிறுவர் சீர் திருத்தப் பள்ளிகளில் இப்படித்தான் குழந்தைகளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்களா? அப்படியானால் சீர்திருத்தப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைக்கும் நோக்கமே பாதிப்புக்கு உள்ளாகாதா? இந்தக் கேள்விதான் மனதை அதிகம் பாதித்தது.

எனது ஞாயிறு!!

போன ஞாயிற்றுக் கிழமை வேறு வேலை எதுவும் பெரிதாக இருக்கவில்லை என்று தோன்றியது. "இன்றைக்கு இந்த வலைப்பதிவுலே ஏதாவது எழுத வேணும்" என்று காலையிலேயே நினைத்துக் கொண்டேன். (வலைப்பதிவு இருக்கே என்பதற்காக எழுதுறதா? அல்லது இருப்பதை எழுதுறதுக்காக வலைப்பதிவா? ஒன்றுமே புரியலையே?).

காலை எழுந்து, இருந்த வேலைகளை முடித்து விட்டு, மகளை டான்ஸ் கிளாசுக்கு அப்பாவுடன் அனுப்பி விட்டு, கணினிக்கு போக முயன்றபோதுதான் பார்த்தேன், மகளுடைய புத்தக மேசை கொஞ்சம் அலங்கோலமாய் இருந்தது. சரி அதை அடுக்கி வைத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று நினைத்து, அந்த வேலையை ஆரம்பித்தேன். அதை அடுக்கிக் கொண்டு போனபோது பார்த்தால் அங்கே சூரியகாந்தி விதைகள் இருந்த ஒரு சின்னப் பை இருந்தது. அடடா, இதை இந்த சம்மருக்கு முளைக்க வைக்க வேண்டும் என நினைத்திருந்தேனே, இது எப்படி இங்கே வந்தது (வேறு எப்படி, வழக்கம்போல் மகளுடைய வேலைதான்), இன்னும் வேறு சில தாவர விதைகளும் வைத்திருந்தோமே என்று நினைத்துக் கொண்டே அவற்றை தேட ஆரம்பித்தேன். அதை தேடிக் கொண்டு போகும்போது கிச்சின் லே ஒரு ஒரு drawer க்குள்ளே இருந்தது. அதை எடுக்கலாம் என்று போனால், அதற்குள் தேவையே இல்லாத பல பொருட்கள். இதை எப்படி இத்தனை நாள் கவனிக்காமல் விட்டோம் என்று எண்ணிக் கொண்டே அதை கிளீன் பண்ண தொடங்கினேன். அதற்குள் book shelf இல் வைக்க வேண்டிய பொருட்களும் சேர்ந்து இருந்தது. சரி அவற்றை எடுத்துக் கொண்டு book shelf பக்கம் போனேனா, அங்கேயும் மீள அடுக்க வேண்டியவாறு நிலமை.

பிறகென்ன, book shelf அடுக்கி வைத்து விட்டு, மீண்டும் கிச்சனுக்கு வந்து drawer எல்லாம் கிளீன் பண்ணி அடுக்கி வைத்து, பிறகு மகளுடைய மேசைக்கு வந்து, அதெல்லாம் அடுக்கி முடித்து........ அப்பாடா, நேரமும் போய்விட்டது. இனி என்ன சமையலுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கத்தான் நேரமிருந்தது.

நான், என்னை ரொம்ப சிஸ்டமட்டிக் ஆன ஆள் என்று நினைத்திருந்தேனே. இவ்வளவுதானா? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

பி.கு. மகளின் மேசையைப் பார்க்கும்போது, நான் சிறு வயதில் வைத்திருந்த ஒரு மேசை நினைவுக்கு வருகிறது. அதுபற்றியும் எழுத வேணும்.

நடைப்பயணம்!

என்னது நடைப்பயணமா? ஏதாவது போராட்டமா?

இல்லை. போராட்டமும் இல்லை, ஒரு மண்ணுமில்லை.

அப்போ ஏதாவது வேண்டுதலா?

இல்லையே, எந்த வேண்டுதலும் இல்லை. இந்த நடைப்பயணம் எனக்காக நானே மேற்கொண்டது.

எந்த தேசத்துக்கு?

எந்த தேசத்துக்குமில்லைங்க. எனது வீட்டிலிருந்து வேலைக்கு தினமும் நடக்க ஆரம்பித்து இருக்கிறேன்.

பூ இவ்வளவுதானா?

அவ்வளவேதான்.

இதுக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா? சரி சரி, எவ்வளவு நேரமெடுக்கும் நடந்து போக?

ஒரு 20/25 நிமிஷமெடுக்கும் (போறதுக்கு மட்டும்).

எதுக்காக இந்த நடைப்பயணம்?

ஒரு மாசமா லீவில அங்கங்கே சுத்தி திரிஞ்சதுல, எல்லோருடைய, அன்புத்தொல்லையினால், அளவுக்கதிகமாக சாப்பிட்டு ஒரு சுற்று பெருத்த மாதிரி ஒரு உணர்வு. அதுதான் தினமும் நடந்து அந்தச் சுற்றை குறைத்துக் கொள்ளும் ஐடியா.

சரி சரி, நடக்கட்டும், நடக்கட்டும், நடைப்பயணம் தொடரட்டும்.

இன்னும் இது எத்தனை நாள் தொடரும்னு தெரியலையே. அதுதான் நமக்கு குளிர் காலம் வர ஆரம்பிச்சிருச்சே, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனாலும் இந்த நடக்க ஆரம்பிச்சதுல இருந்து நிறைய விஷயங்களை யோசிக்க நேரம் கிடைச்சது மாதிரி இருக்கு. தொடரத்தான் வேண்டும்.

சும்மா சும்மா!

எனக்கு சில நேரங்களில வலைப்பதிவில எழுதுறதுக்கு ஏதாவது மனதில ஓடும். ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது, அல்லது எங்காவது நடந்து கொண்டிருக்கும்போது... இப்படியே கணினிக்கு முன்னாலே இல்லாத நேரத்துல என்னெல்லாமோ மனதில வரும். ஆனால் பிறகு கணினிக்கு முன்னுக்கு வந்து இருந்தால் எதுவும் எழுத தோன்றாது. அது ஏனென்றும் தெரியேல்லை.

அதுல நிறைய விஷயங்கள் சும்மா எதுவுமே இல்லாத, உப்புச் சப்பில்லாத விஷயங்கள். ஆனாலும் எழுத வேணும் என்று தோன்றும். சரி, அதை எல்லாம் என்னிடம் இருக்கும் வலைப்பதிவுகளில் எதில் போடலாம் என்று மண்டையைக் கசக்கி யோசிச்சுப் பாத்தன். எதுலயுமே போட ஏலாது என்றுதான் மனதுக்கு படுகுது. அதுனால, இந்த 'சும்மா சும்மா' வலைப் பதிவை தொடங்கியிட்டன் (கஷ்ட காலம்).

இனி ஏதாவது எனக்கு மனசில வாற சும்மா சும்மா விஷயம் எல்லாம், நேரமும் ஒத்துழைத்தால் இங்கே, இந்தப் பதிவிலே விழுந்து கிடக்கும்.