சங்கடமான கேள்வி?

அண்மையில் ஒருவர் என்னிடம் சொன்னார் "உங்கட மகள் உங்களை மாதிரியே இருக்கிறா. உங்களை மாதிரியே புன்னகைக்கிறார்". நான் சிரித்தேன். அவர் மேலும் கேட்டார் "இப்படி நிறையப் பேர் உங்களிடம் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன், இல்லையா?" என்று. நானும் சொல்லியிருக்கின்றார்கள் என்று சொன்னேன். இந்த கதையை நான் மகளிடம் பேசும்போது சொன்னேன். அவளுக்கு 9 வயது ஆகப் போகின்றது. அங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. :)

அவள் வேறு யாரெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள், எப்படி சொன்னார்கள் என்று பெரிய விளக்கங்கள் கேட்டாள். நானும் சொல்லிக் கொண்டு வந்தேன். முன்னொரு தடவை அவளையும் என்னையும் ஒன்றாகச் சந்தித்த, என்னுடன் வேலை செய்யும் ஒருவர் "மகளை குளோனிங் செய்து எடுத்திருக்கிறாயா?" என்று கேட்டதை நினைவு கூர்ந்தேன். இப்படியே கதை போனபோது, குழந்தைகள் அப்பா மாதிரியோ, அம்மா மாதிரியோ இருப்பார்கள் என்று சொன்னேன் (தேவையா எனக்கு??). அவள் உடனே கேட்டாள், "நான் உங்கட வயித்தில இருந்துதானே வந்தேன். நான் எப்படி அப்பா மாதிரி இருக்க முடியும்?". அதுக்கு நான் "அப்பாவுடைய cell இல இருக்கிற DNA யும், அம்மாவுடைய cell இல இருக்கிற DNA யும் சேர்ந்துதான் குழந்தையுடைய cell and DNA வரும். பிறகு அந்த cells பிரிந்து பிரிந்துதான் குழந்தை உருவாகின்றது" என்று சொன்னேன். ஏதோ மாட்டிக் கொள்ளாமல் குழந்தைக்கு சொல்லிவிட்டேன் என்ற இறுமாப்பு வேறு. விடுவாளா அவள், கேட்டாள் அடுத்த கேள்வியை. "நான் உங்கட வயித்துக்குள்ளே இருந்துதானே வந்தேன். பிறகெப்படி அப்பாடை cell and DNA வரும்." தேவையா எனக்கு என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

எனக்கு ஒரு சின்ன idea வந்தது. "உங்களுக்கு DNA என்றால் என்ன என்று தெரியுமா?" என்று கேட்டேன். அதற்கு "அது ஒரு blood என்று பதில் வந்தது." அது blood இல்லை என்று சொல்லி, DNA என்றால் என்ன என்று எளிமையாக விளக்க ஆரம்பித்தேன். பல இடங்களில் அவள் 'விளங்கேல்லை' என்று சொன்னாள். "இப்ப உங்களுக்கு விளங்குறது கொஞ்சம் கஷ்டம். நீங்க இன்னும் கொஞ்சம் வளர்ந்தால், அடுத்தடுத்த வகுப்புக்கு போனால் கொஞ்சம் easy யா விளங்கப்படுத்தலாம். அதால நான் பிறகு உங்களுக்கு விளங்கப்படுத்துறேனே" என்று கேட்க அவளும் சரியென்று விட்டாள். அப்பாடா, இப்போதைக்கு தப்பியாச்சு. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு இல்லையென்றே தோன்றுகின்றது.

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் என்கின்றோம். அதை செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போதுதான் அதிலுள்ள பிரச்சனை புரிகின்றது. :(

பெண்கள் vs ஆண்கள்

பெண்களும், ஆண்களும் கிட்டத்தட்ட 50 க்கு 50 என்ற வீதத்தில் கூடியிருந்த அந்த informal meeting இல், ஒரு ஆண் சொன்ன விஷயங்கள் சுவாரசியமாக இருந்தன. அவர் தான் கூறுகின்ற அத்தனையும் ஆராய்ச்சி முடிவுகள் என்ற முன்னுரையுடன் கூறினார்.

1. பெண்கள் ஆண்களை விட shoping செய்வதும், தேவையில்லாத பொருட்களை வாங்குவதும் அதிகம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. அது உண்மையா என்று பார்த்தபோது, ஆராய்ச்சி முடிவு, ஆண்களும், பெண்களைப் போல் சம அளவில் shoping செய்து, தேவையில்லாத பொருட்களை வாங்குகின்றார்கள் என்று சொல்கின்றதாம்.

ஆண்கள் வாங்கும் பொருட்களும், பெண்கள் வாங்கும் பொருட்களும் வேறு படலாம். ஆனால் தேவையற்ற பொருட்களை வாங்குவதில் இருபாலாரும், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல்ல :)

2. பெண்கள் ஆண்களை விட அதிகமாக கதைக்கின்றார்களா என்பதும் ஆராயப்பட்டிருக்கின்றது. பெண்கள் நாளொன்றுக்கு 20,000 சொற்கள் கதைப்பார்கள் என்று நம்பப்பட்டு வந்ததாகவும், அது உண்மையல்ல என்றும், சராசரியாக நாளொன்றுக்கு 16,000 சொற்கள் மட்டுமே (அம்மாடியோவ், அத்தனை சொற்களா) கதைக்கின்றார்கள் என்றும் ஆராய்ச்சி முடிவு சொல்கின்றதாம். அந்த ஆராய்ச்சி தரும் அதிகப் படியான தகவல், ஆண்களும் கிட்டத்தட்ட அதே 16,000 சொற்களைப் பேசுகின்றார்கள் என்பதுதானாம். :)

3. ஆண்கள் பெண்களை விட புத்திசாலிகள் என்பது பலருடைய (பல ஆண்களுடைய) கருத்து. ஆனால் உண்மையில் பெண்களும் ஆண்களும், சம அளவிலேயே புத்திசாலித் தனத்தை கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த ஆராய்ச்சி முடிவாம்.

4. பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் sex பற்றி நினைப்பதாகவும், ஆண்கள் வெறும் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மட்டுமே sex பற்றி நினைப்பதாகவும் அந்த ஆராய்ச்சி முடிவு சொல்கின்றதாம்.

5. ஆண்களா, பெண்களா அதிக காலம் வாழ்கின்றார்கள் என்று ஆராய்ந்த போது, பெண்களே ஆண்களை விட அதிக வாழ்க்கைக் காலத்தை கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரிய வந்துள்ளதாம். நோர்வேயில் பெண்களின் சராசரி வாழ்க்கைக்காலம் 81.6 ஆகவும், ஆண்களின் வாழ்க்கைக் காலம் 76.4 ஆகவும் இருக்கிறதாம்.

இத்தனையும் சொன்னவர் இறுதியில் பெண்களுக்கு அதிக வாழ்க்கைக் காலம் என்பதற்கு, பெண்களை நோக்கி கொடுத்த comment, "you deserve it ladies".

நேரத்தின் மதிப்பு!

நேரத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா?

> பத்து வருடங்களின் மதிப்பை உணர்ந்துகொள்ள, பத்து வருடங்கள் ஒன்றாய் வாழ்ந்து விவாகரத்துக்குள்ளான தம்பதிகளிடம் கேளுங்கள்.
> நான்கு வருடங்களின் மதிப்பை உணர்ந்துகொள்ள, நான்கு வருடங்கள் காதலித்து விட்டு, தற்போது பிரிந்திருக்கும் இருவரிடம் கேளுங்கள்.
> ஒரு வருடத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள, ஒரு வருட படிப்பின் பின்னர்,
இறுதிப் பரீட்சையில் தோல்வியடந்த ஒரு மாணவனிடம் கேளுங்கள்.
> ஒன்பது மாதங்களின் மதிப்பை உணர்ந்துகொள்ள, முழு வளர்ச்சியின் பின்னர், பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தையைப் பெற்ற தாயிடம் கேளுங்கள்.
> ஒரு மாதத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள, ஒருமாத கர்ப்பத்தின் பின்னர்,
கருச்சிதைவு நடந்த ஒரு தாயிடம் கேளுங்கள்.
> ஒரு கிழமையின் மதிப்பை உணர்ந்துகொள்ள, வார பத்திரிகையின் பதிப்பாசிரியரைக் கேளுங்கள்.
> ஒரு மணித்தியாலத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள, சந்திப்பதற்கு காத்திருந்து சந்திக்க முடியாமல் போன காதலர்களைக் கேளுங்கள்.
> ஒரு நிமிடத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள, ஒரு நிமிட நேரத்தில் பஸ்ஸையோ, ரயிலையோ, விமானத்தையோ தவற விட்டு விட்ட நபரைக் கேளுங்கள்.
> ஒரு செக்கனின் மதிப்பை உணர்ந்துகொள்ள, ஒரு விபத்திலிருந்து நிமிட நேரத்தில் உயிர் பிழைத்த நபரைக் கேளுங்கள்.
> ஒரு மில்லி செக்கனின் மதிப்பை உணர்ந்துகொள்ள, ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் பெற்ற ஒரு நபரைக் கேளுங்கள்.

நேரம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை. உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் பொக்கிஷமாய் பாருங்கள். உங்களுக்கு மிகப் பிடித்தவர்களுடன் அந்த நேரத்தை செலவு செய்யும்போது, உங்களது நேரம் மேலும் பெறுமதி மிக்கதாயிருக்கும்.

அம்மாவே குழந்தை!

இந்த பதிவை எழுத தூண்டியது என்னுடைய 'என்னைப் பாதித்தவை' வலைப்பதிவின் நாடு நல்ல நாடு - நோர்வே 2 பதிவில் ரவிசங்கர் போட்டிருந்த பின்னூட்டத்தில் இருந்த ஒரு விஷயம்.

"முதல் பனி என்னைக்குமே மறக்காது." உண்மைதான். ஆனா இது சம்பந்தமா எனக்கு இன்னொரு மறக்க முடியாத சம்பவம் நினைவுக்கு வந்தது. அதை அங்கே போடாமல், இங்கே 'சும்மா சும்மா' வில் எழுதலாம் னு தோணிச்சு. :)

அந்த நிகழ்ச்சி அம்மாவை குழந்தையாய் பார்த்த நிகழ்ச்சி!

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இந்த நோர்வே நாட்டை காட்டி விட வேண்டும் என்ற ஆசையிலும், நமது குட்டித் தேவதை உலகத்தை பார்க்க ஆவலாய் காத்திருந்த காலமாய் இருந்ததாலும், அவர்களுக்கு டூரிஸ்ட் விசாவுக்கு அனுமதி கேட்டுப் பார்த்தோம். அன்றைய கால கட்டத்தில் இருவருக்கும் ஒரே நேரத்தில் விசா எடுப்பது இலகுவாக இருந்ததில்லை. ஆனால், அதிர்ஷ்ட வசமாக, நாமே எதிர் பார்க்காத நேரத்தில், நம்மிடம் எந்த ஒரு விசாரணையும் கேட்கப்படாமல், அவர்களுக்கு விசா போய் விட்டது. மூன்று மாத விசாவில், ஆவணி மாதத்தில் நோர்வே வந்து சேர்ந்தார்கள்.

நோர்வேயின் அழகை இரசித்தாலும், அப்பாவின் முதல் ஆச்சரியம் பாதையில் ஆட்களை காண்பதே அபூர்வமாய் இருக்கிறது என்பது. பின்ன, இலங்கையை விட நோர்வே பரப்பளவில் கிட்டத்தட்ட 6 மடங்கு பெரியதாக இருந்தும், அதன் சனத்தொகை, 4.4 மடங்கு சிறியதாக இருக்கிறதே. மக்கள் அடர்த்தியைப் பார்த்தால் இலங்கையை விட நோர்வே கிட்டத்தட்ட 25.8 மடங்கு குறைவானது. அப்புறம் இலங்கையுடன் ஒப்பிட்டால் நோர்வேயில் பாதையில் ஆட்களை காண்பது அரிதாகத்தானே இருக்கும். அது மட்டுமா, அவர்கள் இங்கே வந்த காலம் கோடை விடுமுறைக்காலம். அவரவர் குடும்பத்துடன் ஏதோ ஒரு நாட்டுக்கு உல்லாசப் பயணம் போயிருப்பார்கள். இல்லாவிட்டால், உள் நாட்டில் இருப்பவர்களும் கூட எங்காவது கடற்கரை தேடிப் போயிருப்பார்கள். அப்படியே ஊரில் இருப்பவர்களும் அனேகமானோர் காரில் செல்வார்கள். பிறகு எங்கே பாதையில் ஆட்களைப் பார்ப்பது. :)

இருவருமே நோர்வேயை, அதன் அழகை, இங்கிருக்கும் மக்களின் நட்புடன் கூடிய பேச்சை மிகவும் விரும்பினார்கள். ஆனால் இங்கேயே தங்குவதில் இஷ்டமில்லை. எங்களுக்கே எவ்வளவுதான் நோர்வே பிடித்துப் போனாலும், 'சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா' என்றுதானே தோன்றுகின்றது. பிறகு அவர்கள் எங்கே தங்குவது. :)

எதையோ சொல்ல வந்து, எதையோ சொல்லிக் கொண்டு போகின்றேன்.

நோர்வேயின் கோடை காலம் முடிந்து, இலையுதிர் காலம் ஆரம்பித்த பின்னர், அனேகமாக அப்போதெல்லாம் ஒக்டோபர், நவம்பர் மாதத்தில் பனிமழை பெய்யத் தொடங்கி விடும். அப்பா, அம்மா நவம்பர் 2 ஆம் திகதி இலங்கை திரும்புவதாக இருந்தார்கள். எனக்கோ, அவர்கள் திரும்பி போக முன்னர் எப்படியாவது பனிமழையை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை. பின்னே நான் அனுபவித்த அந்த இனிய அனுபவத்தை (முதல் பனியை) அவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா? எனக்கு மட்டுமில்லை. அப்பா, அம்மாவுக்கும் இதே ஆசை. எங்கள் ஆசையை சோதிப்பது போல், ஸ்னோ அடிக்காமலே இருந்தது. எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. அவர்கள் போக இருந்த நாளன்று, அதி காலையில் எழுந்தால் ஸ்னோ மிகச் சிறிய துகள்களாக விழுந்து கொண்டிருந்தது. அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஜன்னலின் வெளியே கையை நீட்டி, அந்த துகள்களை கையிலேந்தி ஆர்வமாய் பார்த்தா. எனக்கோ கவலை, தொடங்கிய ஸ்னோ, சரியாக இருக்காமல் இப்படி இருக்கே என்று. அம்மாவிடம் இது அல்ல உண்மையான ஸ்னோ என்று புரிய வைக்க முயன்று கொண்டிருந்தேன்.

அவர்கள் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று எண்ணிக் கொண்டேன். அவர்கள் புறப்பட்டு, காரில் விமான நிலையத்துக்கு பயணமானோம். 15 நிமிட கார் பயணத்தில், போகும் வழியில் ஸ்னோ வின் அளவு அதிகரித்துக் கொண்டே போனது. அம்மா ஒரு குழந்தையின் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் அதை இரசித்துக் கொண்டே வந்தா. எனக்கு ஓரளவு மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னும் சரியான பனிமழை பெய்யவில்லையே என்று ஆதங்கமாக இருந்தது. (எப்போதான் திருப்தி வரும். ஒன்று கிடைத்தால், அதற்கும் மேலாக எதிர் பார்க்கின்றோம், ஹி ஹி).

விமான நிலையம் போய்ச் சேர்ந்து பயணச் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், இன்னும் ஸ்னோ அதிகமாகாதா என்ற எதிர்பார்ப்பில் என் பார்வை முழுவதும் வெளியேதான். அம்மாவும் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தா. ஆஹா, நாம் எதிர் பார்த்தபடி, ஸ்னோ பெரு மழையாய் கொட்டத் தொடங்கியது. உடனே நான் அப்பாவையும், அம்மாவையும் வெளியே வந்து விட்டு, பின்னர் உள்ளே போகலாம் என்று சொன்னேன். அவர்களும் வெளியே வந்து ஆசை தீர ஸ்னோவைப் பார்த்தார்கள். அம்மா குழந்தையில் குழந்தையாகி, ஸ்னோ வை கையில் பிடிப்பதும், கீழே கொட்டிய ஸ்னோவை தொட்டு அழைந்து பார்ப்பதுமாய் இருந்தது என்னை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. கடைசியில் எப்படியோ ஸ்னோ வை காட்டிய சந்தோஷம் (ஏதோ நானே அவர்களுக்காய் ஸ்னோ கொட்டியது மாதிரி :).

பின்னர் நேரமாகி விட்டதால், அவர்கள் உள்ளே போனதும், நாங்கள் வழியனுப்பி விட்டு, வீடு வந்து விட்டோம். அப்பா, அம்மா அத்தனை நாள் இருந்து விட்டு போனதால் வீட்டில் போயிருக்க பிடிக்காமல், வேறு எங்கோ போய் விட்டேன். அன்று முதல் பனி காரணமாய் எல்லா விமானங்களும் பிந்தியதால், அவர்கள் 2 மணி நேரம் பிந்தி புறப்பட்டதும், அதனால் அடுத்த விமானத்தை Amsterdam இல் தவற விட்டதும், பின்னர் Egypt க்கு அவர்களை வேறு விமானத்தில் அவர்கள் ஏற்றி விட்டு, அங்கேயும் போய் போனதும் தனிக் கதை. :)

அதன் பின்னர் அவர்கள் மீண்டும் ஒருமுறை இங்கே 6 மாத விசாவில் வந்ததும், முழுமையாக ஸ்னோவை பார்க்க முடிந்ததும், ஐரோப்பிய நாடுகளை சுற்றிப் பார்த்ததும் நடந்தது என்றாலும், அந்த முதல் பனியில் அம்மாவிடம் நான் பார்த்த குழந்தைத்தனமும், குதூகலமும், முகத்தின் பூரிப்பும் வாழ்நாள் முழுமைக்கும் மறக்காது. :)

சம்பந்தமே இல்லாமல் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் "முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே.... விழுகிறதே உயிர் நனைகிறதே" பாடல் நினைவுக்கு வருகின்றது. :)

எனது விசித்திரங்கள்!

ஷ்ரேயா என்னிடம் இருக்கிற சித்திர விசித்திர குணாம்சங்களை சொல்ல அழைத்து பல நாட்கள் (அல்லது கிழமைகள், அல்லது மாதங்கள்) ஆயிற்று. ஷ்ரேயா, 'விசர்க்குணங்கள்' என்பதை மற்றவர்களிடம் கேட்கும்போது மட்டும் கொஞ்சம் நாகரீகமாக 'விசித்திர குணங்கள்' என்று சொல்லியிருக்கிறார் போல இருக்கு :). (பின்ன என்ன, 'விசர்க்குணங்கள் இருக்குது என்டு தெரிஞ்சுதான் கூப்பிட்டிருக்கிறீங்க போல!! :O)' எண்டு தன்னை இந்த விளையாட்டுக்கு கூப்பிட்ட ஆக்களிட்டை சொல்லிப் போட்டு, அதே விளையாட்டுக்கு எங்களை கூப்பிட்டால்??? ). இந்த கால இடைவெளியில், எழுத நேரம் இல்லாவிட்டாலும், என்னிடமிருக்கின்ற, இருந்த, (இன்னும் இருக்கப் போகின்றதாக நான் நினைக்கும்) விசித்திர குணங்களை மனதில் அசைபோட்டுப் பார்த்தேன். ஐந்து குணங்கள் தான் கேட்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நினைத்துப் பார்த்தால் என்னிடம் நிறையவே விசித்திரம் (விசர்த்தனம், லூசுத்தனம், கிறுக்குத்தனம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட weirdness) இருக்கும்போலிருக்கு. எதைச் சொல்ல? எதை விட? ஏதோ என்னாலானதை நானும் சொல்லி விட்டுப் போகின்றேனே. :) Weird round விளையாட்டு முடிஞ்சு இவ்வளவு காலம் தாழ்த்தி, அது பற்றி எழுதுகின்றேனே. இதுவே Weird தானே????

1. கனவுகள்: விசித்திரம் என்றதுமே எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது நான் காணும் கனவுகள். இது என் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகவும், தானாகவே வருவதாகவும் இருந்தாலும், இந்த விசித்திரத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை. நான் எப்போதாவது கனவு காணாமல் தூங்கியிருப்பேனா என்றே தெரியாது. என்னை சினேகிதிகள் 'கனவுக்கன்னி' என்று நக்கல் அடித்தாலும், என்னிடம் அன்று கண்ட கனவு என்ன என்று கேட்க தவற மாட்டார்கள். அவ்வளவு விசித்திரமான கனவுகள். நாவல் (நீண்ட கனவுகள்), சிறு கதைகள் (குறுகிய கனவுகள்), தொடர்கதைகள் (சொன்னா நம்புங்க, எனக்கு ஒரு கனவின் தொடர்ச்சி, ஒரு விழிப்பின் பின்னர் அடுத்த தூக்கத்தில் தொடரும்) எல்லாம் வரும். ஒரு கனவு கண்டு எழுந்த பின்னர், அந்த கனவு கண்டதாக அடுத்த கனவில் வேறு யாரிடமாவது சொல்லிக் கொண்டிருப்பேன். சில சமயம் கனவிலேயே 'நான் காண்பது கனவா?' என்ற கேள்வி எழுவதும், அதை உறுதி செய்ய என்னை நான் கிள்ளிப் பார்த்துக் கொள்வதும், அது வலிப்பதாயும் அதனால் நான் காண்பது கனவில்லை என்ற முடிவுக்கு வருவதும் நடப்பதுதான். ஒரு நாளாவது 'இது நிச்சயம் கனவுதான்' என்ற முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கனவுகள் ஒருபோதும் கலரில் வருவதில்லை என்று சிலர் அடம் பிடிக்கிறார்கள். ஆனால் எனக்கு கலரில்தான் வருகின்றது. எழுந்த பின்னர் கனவில் கண்ட கலர் நினைவில் இருந்தால் கனவு கலர் கனவுதானே? (சில சமயம் black and white இலும் வரும்).


சரி, அப்படி என்னதான் விசித்திர கனவு, அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.....

*ஏரிகளில், கடலில் எல்லாம் நீரின் மேற்பரப்பில் நடந்து போவேன். அப்படியே பின்னர் உள்ளே போய் விடுவேன். அங்கே மாடமாளிகைகள் எல்லாம் இருக்கும். சிலவேளை புராணக் கதையில் வருபவர்கள் எல்லாம் இருப்பார்கள். நானும் அவர்களுடன் இருப்பேன். சில சமயத்தில் தற்கால நிகழ்ச்சிகளும் வரும், இப்படியே தொடரும். கனவிலன்றி, உண்மையில் நீர்நிலையின் மேலாக நடக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இங்கே நல்ல winter season இல், snow அதிகம் இருந்த சந்தர்ப்பத்தில், கீழே நீரும், மேலே இறுகிப் போன snow வும் இருந்தபோது, மேலே நடந்த போது, எனக்கு அந்த கனவு பலித்ததாய் தோன்றியது. நல்லவேளை உள்ளே போகவில்லை. விறைத்து செத்திருப்பேன். :)

*இந்தியாவில் எங்கள் குடும்பம் சுற்றிப் பார்க்க போனோம். எஸ்.பி. பாலசுப்ரமணியம் நமக்கு ஊர் சுற்றிக் காட்டினார். அதுவும் நெரிசல் நிறைந்த பஸ்ஸிலேயே கூட்டிப் போனார். பஸ்ஸில் ஏறியதே விசித்திரம்தான். ஓடுகின்ற பஸ்ஸில் அவரும் ஏறிக் கொண்டு, எங்களையும் ஏறச் சொன்னார். அட, நானும் மிகச் சுலபமாக ஏறிக்கொண்டேன். பாவம் அம்மாவுக்கு ஓடி ஏறத் தெரியவில்லை.

*இரட்டையர்கள் போல், என்னுடன் ஐந்து பேர் ஒன்றாக பிறந்திருப்பார்கள். அதனால் வரும் சிக்கல்கள்.

கனவு சொல்ல சொன்னால் சொல்லிக் கொண்டே இருப்பேன். பிறகு இது கனவுக் கட்டுரை ஆகி விடும். அதனால் இங்கே நிறுத்துகின்றேன். சிலசமயம் கொஞ்சம் கூட நான் நினைத்தே பார்க்காத விஷயங்கள் எல்லாம் கனவில் வரும்போது, ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். சிலவேளை, அன்றன்றைக்கு நடந்த, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல விஷயங்கள் ஒன்றாய் கலந்து சாம்பார் கனவாக வரும்.

பல சந்தர்ப்பங்களில், கனவுகளை ரசித்தாலும், சில சமயம் இந்த கனவுகளை எப்படியாவது நிறுத்தி விட மாட்டோமா என்று தோன்றுவதும் உண்டு. காரணம், இரவு முழுவதும் கனவு தொடர்வதால், காலையில் எழும்போது, தூங்கி எழுந்தது போல் இல்லாமல், முழு இரவும் விழித்திருந்ததாய் தோன்றி, சோர்வாக இருக்கும்.


(மேலதிக தகவல் ஒன்று... எங்கள் குட்டித் தேவதை நேற்றிரவு தான் கண்ட கனவைக் கூறினாள். Mount Everest இல் அப்பாவும், அவளும் ஏறினார்களாம். பரவாயில்லை. அம்மாவுக்கு ஏற்ற பிள்ளைதான்.)



2. சேகரிப்பும் ஒழுங்கும்: சிறு வயதில் எதைக் கண்டாலும் அதை சேகரிக்கும் ஒரு பழக்கம் இருந்தது. முத்திரை சேகரிப்பில் ஆரம்பித்தேன். நாணயங்கள் (மறந்திருந்த தமிழ் சொற்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வர :) இந்த பதிவுகள் உதவுது) சேகரித்தேன். பிறகு Post cards, பூ படங்கள், இயற்கை அழகுப் படங்கள், வெவ்வேறு விதமான மணிகள், என்று போய், பிறகு ஸ்வீட்ஸ் சுற்றி வரும் தாள், சோப் சுற்றி வரும் தாள் என்று எல்லாக் குப்பையும் சேகரிக்க தொடங்கினேன். ஒரு சிவப்பும், கறுப்பும் சேர்ந்த மணி போன்ற ஒரு விதை ஒரு மரத்தில் இருந்து எடுத்து (அதன் பெயர் எனக்கு தெரியாது. குழைக்காட்டை சேர்ந்தவர்களுக்கு :) தெரியும் என நினைக்கிறேன், புதர் நிறைந்த இடங்களில், ஏதோ ஒரு புதரில் இருக்கும். அது காய்ந்து போகாமல் இருக்கும்) அதையும் கூட சேகரித்தேன். எல்லாவற்றையும் எனக்கென்று இருந்த ஒரு மேசையில் அழகாக அடுக்கி வைப்பேன். யாரும் அதில் தொடக் கூடாது. தொட்டால் கோபம் கோபமாய் வரும். கோபம் வந்தால் அழுவதுதான் என் வழக்கம்.

ஒரு சந்தர்ப்பத்தில் என்னுடைய சேகரிப்பு பொருளில் ஒன்றை எனது தங்கை கேட்க, நான் தரமாட்டேன் என்று அடம் பிடிக்க, பிரச்சனை அம்மாவிடம் விசாரணக்குப் போய், 'நீ பெரியவள்தானே விட்டுக் கொடுத்து விடு' என்று அம்மா தீர்ப்புச் சொல்ல, கோபத்தில் எல்லாவற்றையும் தூக்கி அவளிடம் கொடுத்து விட்டேன். அதன் பிறகு, என்னால் சேகரித்து, பல வருடமாய் பாது காக்கப்பட்ட பொருட்களின் ஆயுள்காலம் விரைவாய் முடிந்து விட்டது. :)

வீட்டிலும் நான் ஒழுங்கு செய்து வைப்பதை வேறு யாரும் மாற்றி வைப்பது பிடிக்காது. நானே நேரத்துக்கு நேரம் இடம் மாற்றி வைப்பது வேறு விஷயம். :) புத்தகங்களை அடுக்கி வைத்தால், இருட்டில் கூட போய் எடுத்து வந்து விடலாம். எந்த அடுக்கில், எத்தனையாவதாக என்ன புத்தகம் இருக்கு என்பது நன்றாக தெரியும்.

இப்போது நிலமை தலைகீழாகி வருகின்றது. நான் எதை அடுக்கி வைத்தாலும், அதை கலைத்துப் போடுவது எங்கள் வீட்டு குட்டித் தேவதையின் வேலை. கொஞ்ச நாள் அவள் கலைத்துப் போட போட நான் அடுக்கி வைத்துக் கொண்டே இருந்தேன். இப்போது களைத்துப் போய் விட்டேன். அதனால் ஓரளவுக்கு ஒழுங்கற்று இருக்கவும் பழகிக்கொண்டு வருகின்றேன்.

3. தேவையற்ற மனப் பதட்டம்: தேவையே இல்லாமல் மனப்பதட்டம் கொள்வது என்னிடம் இருக்கும் நானே விரும்பாத ஒரு இயல்பு. இதற்கு சில உதாரணம்.

அன்புக்குரியவர்கள், நெருங்கியவர்கள் எங்காவது போயிருந்தால், நான் எதிர் பார்க்கும் நேரத்தில் அவர்கள் திரும்பாவிட்டால், என்ன நடந்திருக்கும் என்று யோசித்து மனதில் பதட்டம் ஆரம்பிக்கும். நேரம் செல்ல செல்ல அதிகரித்து, அவர்கள் வரும்வரையோ, அல்லது அவர்களிடம் இருந்து ஏதாவது தகவல் வரும்வரையோ பெரிய மன உளைச்சலாகவும் கஷ்டமாகவும் இருக்கும்.

மகளின் ஸ்கூல் பக்கமாய் ambulance போவதைக் கண்டால் ஒரு பதட்டம் ஆரம்பிக்கும். அங்கிருந்து ஏதாவது போன் வந்து விடுமோ என்ற பதட்டமும், அப்படி வந்து விடக் கூடாதே என்ற பயமும் கொஞ்ச நேரத்துக்கு இருக்கும். குறிப்பிட்ட நேரம் வரை எந்த போனும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பதட்டம் தணியும்.

4. உடமைகள்: என்னுடைய பொருட்கள் வேறு எங்காவது இருப்பது பிடிக்காது (நானே அவர்களுக்கு கொடுத்தால் சரி). அதே போல் மற்றவரின் உடமைகள் என்னிடம் இருப்பதும் பிடிக்காது. ஹொஸ்டல் வாழ்க்கையின் போது, யாராவது தங்கள் பொருட்களை மறந்து போயோ, அல்லது பிறகு எடுக்கலாம் என்ற எண்ணத்திலோ என் அறையில் வைத்துவிட்டு போக முடியாது. முதல் வேலையாய் அதை எடுத்துக் கொண்டு போய் அவர்கள் அறையில் வைத்து விட்டு வருவேன். அப்படி அவர்கள் அறையில் இல்லாவிட்டாலும், எங்கே இருக்கிறார்கள் என்று தேடிப் பிடித்து, கையுடன் கூட்டிச் சென்று அங்கே வைத்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன். "இவள் ஒருத்தியோட பெரிய கரைச்சல்" என்று திட்டு வாங்கினாலும், அந்த பழக்கத்தை என்னால் விட முடியாமல் இருந்தது.

5. இன்னும் சில>

* கற்பனை: தாறுமாறா எதையாவது கற்பனை செய்வது. A beautiful mind படம் பார்த்த போது, ஒருவேளை John Nash க்கு தெரிந்ததுபோல், நான் பார்க்கும் மனிதர்களில் சிலரும் எனது கற்பனையில் வரும் மனிதர்களாய் இருப்பார்களோ என்ற சந்தேகம் கூட தோன்றியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சே சே அப்படியெல்லாம் இருந்தால், என்னை எப்போதோ மனநல வைத்தியசாலையில் சேர்த்திருப்பார்கள் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். :) இன்னொரு முக்கியமான விஷயம்... உடனே நான் எதோ என்னை John Nash க்கும், அவருடைய கற்பனைக்கும் என்னை ஒப்பிட்டு பேசுவதா தப்பா எடுத்துக்காதீங்க. :))) கற்பனை செய்வதை மட்டும்தான் சொல்கின்றேன். கற்பனையில் வரும் விஷயங்களை அல்ல.

* திட்டமிடுதல். நான் ரொம்ப விருப்பத்துடன் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதை செய்து முடிக்கும்வரை அதே சிந்தனையில் இருப்பேன். செய்தும் முடிப்பேன். ஆனால், அதே நேரம் கட்டாயம் செய்ய வேண்டியவை என்றிருக்கும் விடயங்களை, எத்தனைதான் திட்டம் போட்டாலும் தவிர்த்துக் கொண்டே இருப்பேன். படிக்கின்ற காலத்தில், கவனமெடுத்து படிக்க வேண்டும் என்று, ஒவ்வொரு வகுப்பிலும் நினைத்ததும், பல்கலைக்கழகத்திலும், அதுவே ஒவ்வொரு வருட திட்டமாய், செமஸ்டருக்குரிய திட்டமாய் இருந்ததும் (திட்டமாய் மட்டும் இருந்ததும்) தொடர்ந்தது. அடுத்த வருடம், அல்லது செமஸ்டரில் கட்டாயம் சரியாக திட்டமிட்டு படிக்க வேண்டும் என்று திட்டம் மட்டும் போடுவேன். அந்த திட்டங்களை நிறைவேற்றியது இல்லை :) . 'பழைய குருடி கதவை திறவடி' கதைதான்.

*மறதி: எனக்கு அறிமுகமானவர்களை, நண்பர்களை, உறவினர்களை எவரையுமோ, அல்லது நிகழ்ச்சிகளையோ மறக்க மாட்டேன். ஆனால் ஆட்களின் பெயர்களை இலகுவாக மறந்து விடுவேன். அது எப்படி பெயர் மட்டும் மறந்து போகின்றது என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனாலும் சில சமயம் எத்தனை கஷ்டப் பட்டாலும், பெயர் நினைவுக்கு வரவே வராது. "ஒருநாளைக்கு என்னையும் பாத்து, உனக்கு பேர் என்ன என்று கேட்டாலும் கேட்பாய்" என்று நெருங்கிய தோழிகள் கேலி செய்வதும் உண்டு.

* அறியாததை அறிந்ததான உணர்வு: சில புதிய இடங்களுக்கு போகும்போது, அந்த இடத்தை ஏற்கனவே பார்த்தது போன்ற உணர்வு (கனவில் பார்த்திருப்பேன் :) போலும் என்று நினைத்துக் கொள்வேன்), சில புதிய நிகழ்வுகள் நடக்கும்போது, அதே நிகழ்வு முன்பும் அதே மாதிரி நடந்தது போன்ற உணர்வு எல்லாம் வரும்.

மேலே சொன்னவற்றில் சில விசித்திரங்கள் தொடர்கின்றது. சில மறைந்துவிட்டது. சில மறக்கடிக்கப் பட்டு விட்டது. சில விசித்திரங்கள் சொல்ல முடியாது என்பதால் இங்கே விடப் பட்டும் விட்டது :).

அநேகமாக எல்லோரும் தங்கள் விசித்திரங்களை கூறி முடித்து விட்ட நிலையில், இங்கே எனது விசித்திரங்கள் வந்துள்ளன. விசித்திரம், அல்லது விசர்த்தனம்தான். :)

புரியாத கதை!

காலைநேரம். மகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல வெளியே வந்தேன். வெளியே மழை. குடையை விரித்தபோது, என்னை அறியாமல் சிறு வயதில் மனப் பாடம் செய்த பாட்டு வாயில் வந்தது. அதை உரத்துச் சொன்னேன்.

குடை பிடித்து செருப்புமிட்டு
புத்தகமும் கொண்டு
குடுகுடென நடந்து வரும்
குழந்தைகளே கேளீர்

(சிறுது இடைவெளி விட்டேன். மகள் சொன்னாள் ""நல்ல பாட்டம்மா, படியுங்கோ")

மழைக்காலம் மிக வழுக்கும்
மிகக் கவனம் மக்காள்
வழியருகே வெள்ளமுண்டு
விலகி வரல் வேண்டும்

("ஏனம்மா splash splash அடிச்சுக் கொண்டு வந்தால்தானே நல்லாயிருக்கும்?" இது மகள். "இங்க நீங்க shoe போடுறதால splash splash அடிக்கலாம். ஆனா slippers அல்லது வெறும் காலோட அங்க நாங்க விளையாடினால் காலில புண் வரும்" இது நான். "ஓஓஓஓஓஓஒ" பெரீய ஒரு ஓ போட்டாள் மகள்.)

வெள்ளத்தில் கல்லெறிந்து
விளையாட வேண்டாம்
("ஏனம்மா விளையாடக்கூடாது?" இது மகள். "கல்லெறிஞ்சு விளையாடினால், உடுப்பெல்லாம் சேறாகி விடும். மிச்ச பாட்டை கேளுங்கோ" இது நான்.)
வீண் சண்டையால் வழுக்கி
விழுந்தெழும்ப வேண்டாம்

(கடைசி பந்தி நினைவுக்கு வர கொஞ்சம் அடம் பிடித்தது. பிறகு ஒரு மாதிரி, அதையும் தேடிப் பிடித்து பாடினேன்.)

கண்மணிகாள் நீர்ச்சிரங்கு
காலில் வரும் கவனம்
கண்ணுறக்கம் இல்லாமல்
கதறி அழ நேரும்

"அது என்னம்மா நீச்சிரங்கு?" என்று மகள் கேட்க, அதுக்கு விளக்கம் கொடுத்தேன். பிறகு "பாத்தீங்களா? அம்மாக்கு சின்ன வயசுல பாடமாக்கினது இன்னும் நினைவிருக்கு" என்று நானே பெருமைப் பட்டுக் கொண்டேன். "வேறு என்னெல்லாம் நினைவிருக்கு?"
"நிறைய எல்லாம் நினைவிருக்கு".
"அதுதான் என்ன நினைவிருக்கு?" மகளுக்கு அம்மாக்கு உண்மையா நினைவிருக்கா என்ற சந்தேகம் தீரவில்லை. :)

"ம்ம்ம்,, அம்மா சின்ன வயசுல நடிச்ச நாடகம் ஒண்டு நினைவிருக்கு".
"அது என்ன? சொல்லுங்கோ, பாப்பம்", அட அவளுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை.
"அது தமிழ் இலக்கணத்தோட வரும். நான் சொன்னாலும், உங்களுக்கு விளங்காது".
"நீங்க சொல்லுங்கோ".

இவள் இன்றைக்கு விடமாட்டாள் என்று புரிந்தது. "சரி சொல்லுறன் கேளுங்கோ. அது கண்ணகி நாடகம். அதுல நான் king. ஆனால் எனக்கு மற்றவை பேசின வசனங்களும் பாடம். அதையும் சேர்த்து சொல்லுறன், சரியா?"

"ஓம்".
"ஓகே"

மன்னன்:"அரண்மனைக் காவலர்களை மீறி ஆவேசக் கோலத்தில் உள்ளே நுழையும் நீ யார்?"
கண்ணகி:"நானா? புறாவுக்கு உடல் தந்து புகழ்பெற்ற மன்னவனின் வரலாற்றை, தேர்க்காலில் மகனையிட்டு நீதி காத்த மனுநீதிச் சோழனது பெருங்கதையை, நீதியின் இலக்கணமாய் உரைக்கும் திருமாவளவன் கரிகாற்சோழனது (அம்மா, அம்மா, இடையில் மகளின் குறுக்கீடு, ஆனால் நான் நிறுத்தவில்லை :)) பூம்புகாரே எனது ஊர். பெருவணிகன் மாசாத்துவானின் மருமகள். என் பெயர் கண்ணகி". சொல்லி விட்டு நான் ஒரு சின்ன இடைவெளி விட்டதும், மகள் இடையில் புகுந்தாள்.

"அம்மா, போதும் நிப்பாட்டுங்கோ. எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை".
"நான் முதலே சொன்னேன்தானே விளங்காதேண்டு".

கண்ணகி, யாருடைய மகள் என்று சொல்லாமல், யாருடைய மருமகள் என்று சொன்னதன் காரணமென்ன என்று எனக்குள் ஒரு கேள்வி ஓடியது. நாடகம் நடித்த வயதில் தோன்றாத கேள்வி இது.

"அந்த நாடகத்தை எனக்கு விளங்குற மாதிரி சொல்லுறீங்களா?" என்று மகள் கேட்டாள். சரியென்று, கண்ணகியும், கோவலனும் பாண்டிய நாட்டுக்கு ஒரு கஷ்டத்தால் வந்தார்கள் என்று தொடங்கி (முன்கதை சொல்லவில்லை, அதில் எனக்கே பல கேள்விகள் உள்ளது என்பதாலும், நாடகம் இந்த இடத்தில் இருந்தே ஆரம்பித்தது என்பதாலும்), கண்ணகி ஊரை எரித்தது வரை சொன்னேன்.

"அது எப்படி எரிச்சாங்க? ஏன் எல்லாரையும் எரிச்சாங்க?" சோகமாகக் கேட்டாள் மகள். எனக்குள் இன்னமும் இருக்கும் கேள்விகள்தான் அவை. அதற்குள் நான் போக வேண்டிய bus வந்துவிட்டதால், அத்துடன் நிறுத்தி விட்டு புறப்பட்டு விட்டேன்.

மாட்டிக்கிட்டேன்!!

அன்னைக்கு insects பத்தி என்னமோ TV ல போச்சுது. அதுல தேனீ பத்தி போனது. அப்போ நான் என் 8 வயது மகளுக்கு விளக்கம் கொடுத்துக் கிட்டே வந்தேன். தேனீ தேன் இருக்கிற இடத்தை மத்த தேனீக்களுக்கு எப்படி சொல்லும், தேனீ சமூகத்துல பெண் தேனீக்கள் தான் வேலையாட்கள், அதுல ஒரு பெண் தேனீ மட்டும் அரசியா இருக்கும். ஆண் தேனீக்களோட வேலை just mating தான், அவங்க வேறு ஒரு வேலையும் செய்ய மாட்டாங்க ன்னு சொன்னேன். மாட்டிக்கிட்டேன், நல்லா மாட்டிக்கிட்டேன். அவ உடனே கேட்டா, mating? அப்படின்னா என்ன? நான் அதுக்கு எப்படி பதில் சொல்லுறதுன்னு நல்லா முழிச்சேன். அப்புறம், babies வாறதுக்கு அவங்க செய்யுறதுதான் mating னு சொன்னேன். நல்ல வேளையா அவ வேறு எதிலோ ரொம்ப busy யா இருந்ததுனாலே, அதுக்கு மேலே கேள்வி கேக்காம போய்ட்டா. தப்பினேன், பிழைச்சேன்.

இது நானாப் போய் மாட்டிக்கிட்டது. அவளா நிறைய தர்ம சங்கடமான கேள்வியெல்லாம் கேக்கிறா. உதாரணம் baby எப்படி வயுத்துக்குள்ளே வருது? அவளுக்கு சரியான பதிலை, அவளுக்கு புரியுற மாதிரி எப்படியெல்லாம் சொல்லுறதுன்னு மண்டையை உடைக்கிறேன். "இப்போ சொன்னா உங்களுக்கு புரியுமா தெரியலை, நீங்க கொஞ்சம் வளர்ந்த பிறகு அது சொல்லித் தாறேன்" ன்னு சொன்னேன். அவளும் (நல்ல வேளையா) அந்த பதிலில் திருப்தியாகி போய்ட்டா.

ஆறுதல் வார்த்தைகள்!!

பல சமயங்களில் எழுத எத்தனையோ இருந்தாலும், எதையும் எழுத தோன்றுவதில்லை. ஆனால் இன்று தமிழ்நதியின் 'மரணம் பற்றிய குறிப்பு', பார்த்ததும் எழுதத் தோன்றியது.

தமிழ்நதி, தனக்கேயுரிய நடையில் தற்கொலை மரணம் ஒன்றின் பாதிப்பை வெளிக் கொண்டு வந்திருக்கிறார். அவர் அங்கே எழுதியிருப்பது அனைத்தும் மனதில் மெல்லிய வலியை தந்தாலும், சில வரிகள் கவனத்தை கொஞ்சம் அதிகமாகவே ஈர்த்தது. காரணம் அந்த வரிகளில் உள்ள விடயம்பற்றி சில நாட்களாக நானும் யோசித்துக் கொண்டிருப்பதுதான். அந்த வரிகள்....

&&“இந்த ஆறுதல் வார்த்தைகளை நான் பேசவேண்டுமா வேண்டாமா…?” என உங்களில் எவருக்கும் தோன்றினால், தயவுசெய்து பேசுங்கள். இல்லையெனில், பேசவேண்டிய சமயத்தில் பேசாமற் தங்கிவிட்ட வார்த்தைகள் முள்ளாக உள்ளிருந்து கிழிக்கும். மலமாக நாற்றமடிக்கும். யார் கண்டது…? ஒரு புன்னகையில், ஒரு சொல்லில், ஒரு கையின் வெப்பத்தில், ஒரு ஆழமான பார்வையில், ஒரு தலை தடவலில் ஒரு மரணம் தவிர்க்கப்படலாம்.&&

தற்கொலையை நோக்கி நகரும் ஒருவருக்கு, சில சமயம் தமிழ்நதி கூறியிருப்பதுபோல, வெற்று வார்த்தைகள் எதுவும் இல்லாமல், சில சின்ன சின்ன செயல்கள் கூட அவரை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டு வரலாம். இந்த வார்த்தைகள் தற்கொலை செய்து கொள்ளப் போகும் நபர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பொருந்தும் என்று தோன்றுகின்றது. இந்த ஆறுதல் வார்த்தைகள் உதவுவது மரணத்தை நோக்கிச் செல்பவர்களுக்கு மட்டுமல்ல. மரணத்தைப் பற்றி சிந்திக்காத, உடலால் வாழ்ந்து கொண்டு, உணர்வால் இறந்து கொண்டிருக்கும் சிலருக்கு கூட இப்படி சில ஆறுதல் வார்த்தைகளோ, அன்றில், வார்த்தைகள் எதுவுமற்ற செயல்களோ அவருள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

நிரந்தரமற்ற இந்த வாழ்வில், எவரும், எப்போதும் இல்லாமல் போகலாம். அப்படி இருக்கையில், ஒருவர்மேல் ஒருவருக்கு எதற்கு தேவையற்ற ஆதங்கங்கள், கோபங்கள். சில சமயம் உண்மையான அன்பால் பிணைக்கப்பட்டவர்களே கூட கோப தாபங்களால் ஒருவரை ஒருவர் வருத்திக் கொள்கின்றார்கள். இப்படி ஒரு நிலையில் ஒருவருக்கு ஏதாவது ஆகி விட்டால், மற்றவரின் நிலை என்ன? நாம் வாழும் குறுகிய வாழ்க்கை காலத்தை, ஏன் நல்ல விதமாக அமைத்துக் கொள்ளக் கூடாது?