கண்ணீர்ப்பூக்கள்!!

போன வார விடுமுறையில் கண்ணாடிப்பூக்கள் படம் பார்த்தேன். அதை இப்பத்தான் பார்த்தீர்களா என்று பலரும் சலித்துக் கொள்வதுபோல் எனக்கு ஒரு தோற்றம். என்ன செய்வது நானிருக்கும் இடத்தில் தமிழ்ப்படங்கள் எடுப்பது இலகுவல்லவே. லண்டன் போயிருந்தபோது ஒரு படத்துக்கு 3 பவுண்ஸ் (மட்டுமே) கொடுத்து DVD கொஞ்சம் வாங்கி வந்தோம். அதுலே ஒன்றுதான் இந்தக் கண்ணாடிப்பூக்களும்.

நிறைய நாளைக்குப் பிறகு நல்ல ஒரு கருத்துள்ள படம் பார்த்த திருப்தி. இரண்டாவது குழந்தை பிறந்ததும், முதல் குழந்தை மேல் வைத்திருக்கும் கவனங்கள் குறைந்து விடுவதும், அதனால் அந்த குழந்தைகள் மனதில் எழும் பிரச்சனைகளையும் கதை எடுத்துக் காட்டுகிறது. இரண்டாவது குழந்தைக்கு தயாராகும் எல்லா அம்மா, அப்பாக்களும் கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயம்.

படத்தில் பல இடங்கள், மனதை ஆழமாகத் தொட்டது. ஒரு பக்கம் இறந்து போன குழந்தை, மறு பக்கம் அந்தக் குழந்தையின் இறப்புக்கு தமது மற்ற குழந்தையே காரணம் என்பதை அறிந்ததில் அதிர்ச்சி, அந்தக் குழந்தையை சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி பாதுகாப்பது என்பது புரியாத குழப்பம், தமது குழந்தை தப்பு செய்வதற்கு தாமே காரணமாகி விட்டோமே என்ற தவிப்பு.... இப்படியே அந்தப் பெற்றோர் படும் அவஸ்தைகள் யதார்த்தமாக சொல்லப்பட்டு இருந்தது.

அந்தக் குட்டிப்பையனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியதும், அங்கே அந்த வில்லனை பொறுப்பாளராகப் பார்த்ததுமே, நெஞ்சுக்குள் படபடப்பு. அந்த நபர் கொஞ்சம் இடக்கு மடக்காக ஆரம்பத்தில் இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு கடுமை அங்கே தொடர்ந்து வரவில்லை (நல்ல வேளையாக).

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்... உண்மையிலேயே இந்தியாவில் இருக்கும் சிறுவர் சீர் திருத்தப் பள்ளிகளில் இப்படித்தான் குழந்தைகளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்களா? அப்படியானால் சீர்திருத்தப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைக்கும் நோக்கமே பாதிப்புக்கு உள்ளாகாதா? இந்தக் கேள்விதான் மனதை அதிகம் பாதித்தது.